< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

தினத்தந்தி
|
16 Jun 2022 12:55 PM GMT

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காஷ்மீரின் குல்காம் மாவட்டம் மிஷிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன் தினம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்து வந்தது. வனப்பகுதி என்பதால் சண்டை நேற்றும், இன்றும் நீடித்தது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஹங்ஹல்கவுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்