< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகள் கைது; போலீசார் தகவல்
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகள் கைது; போலீசார் தகவல்

தினத்தந்தி
|
11 Oct 2022 3:33 AM GMT

பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகளை கைது செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.



சண்டிகர்,


பஞ்சாப்பில் கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளை பற்றிய தகவலை சேகரித்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், கடந்த 10 நாட்களில் 5 பயங்கரவாத கும்பலை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

அவர்களில் கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் லக்பீர் லண்டா மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஹர்வீந்தர் ரிண்டா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து நடத்தி வர கூடிய ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கடந்த 1-ந்தேதி கைது செய்தனர்.

இதுபோன்று கடந்த 10 நாட்களில், 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், அவர்களிடம் இருந்து ஏ.கே.-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 தோட்டா உறைகள், 90 தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபற்றி ஐ.ஜி. சுக்செயின் சிங் கில் கூறும்போது, பஞ்சாப்பில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நீடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாதிகளில் லக்பீர் லண்டா பீகாரில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை, கொலை முயற்சி, தாக்குதல், கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களின் போதை பொருள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் போலீசார் தடுத்து, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். கடந்த வாரத்தில் 314 போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் ஐ.ஜி. கில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்