இரண்டு தோற்றங்களில் விஜய் சேதுபதி
|தமிழில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய விஜய்சேதுபதி, தனது ஐம்பதாவது படத்தை நெருங்கி உள்ளார். இவரது ஐம்பதாவது படத்தை `குரங்கு பொம்மை' இயக்குனர் நிதிலன் இயக்க உள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டியும் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரான சுதன் கூறுகையில், `நாங்கள் தயாரிக்கும் படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பது எங்களுக்கே ஆச்சரியம் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஆக்ஷன்-பழிவாங்கும் படமாக உருவாக இருக்கும் இந்தக் கதையில், இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தை 85 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இப்போது 50 நாட்களுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளோம். அடுத்த பத்து நாட்களில் விஜய்சேதுபதிக்கான முழு படப்பிடிப்பும் முடிந்து விடும்' என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கானின் `ஜவான்', `மெர்ரி கிறிஸ்துமஸ்' மற்றும் மணிகண்டன் இயக்கும் புது வெப்சீரிஸ் ஆகியவற்றை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.