< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் வேடத்தில் நடிக்க விரும்பும் ராஷ்மிகா
சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் வேடத்தில் நடிக்க விரும்பும் ராஷ்மிகா

தினத்தந்தி
|
8 July 2024 2:03 AM GMT

குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகைக்கும் இருக்கும் என்று ராஷ்மிகா கூறினார்.

சென்னை,

கர்நாடகாவைச் சேர்ந்தவர், நடிகை சவுந்தர்யா. 1992-ம் ஆண்டு 'பா நானா பிரீதீசு' என்ற கன்னட படத்தின் வாயிலாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த இவர், 1993-ம் ஆண்டு 'பொன்னுமணி' படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து ரஜினியுடன் 'அருணாச்சலம்', 'படையப்பா', கமலுடன் 'காதலா காதலா', அர்ஜுனுடன் 'மன்னவரு சின்னவரு', விக்ரமுடன் 'கண்டேன் சீதையை', விஜயகாந்துடன் 'தவசி', 'சொக்கத்தங்கம்', பார்த்திபனுடன் 'இவன்' உள்ளிட்ட படங்களில் நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தார்.

இது தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியானார். தற்போது இவரின் வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் கன்னட திரையுலகில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், அவரது வாழ்க்கை படமானால் சவுந்தர்யா கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

''குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகைகளுக்கும் ஏக்கம் இருக்கும். எனக்கும் மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் சவுந்தர்யாவாக நடிக்க ஆசை இருக்கிறது.

அது எனது கனவு. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சவுந்தர்யாவின் நடிப்புக்கு தீவிர ரசிகை. அவரது படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அவரது படங்களை பார்த்து வளர்ந்த நான் இப்படி முன்னணி கதாநாயகியாக உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு சவுந்தர்யா சாயல் இருப்பதாக பலரும் பேசுகிறார்கள். அதனால் சவுந்தர்யாவாக நடிக்க ஆசை அதிகமாகி கொண்டே வருகிறது. வாய்ப்பு வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்