
image courtecy:instagram@raimasen
மாகாளி படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை - தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்

சமீபத்தில் மாகாளி படம் சம்பந்தமாக போஸ்டர் வெளியானது.
சென்னை,
பிரபல இந்தி நடிகையான ரைமா சென் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் காஷ்மீர் பைல்ஸ் படத்தை எடுத்த விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வந்த வாக்சின் வார் படத்திலும் நடித்து இருந்தார்.
தற்போது மாகாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். 1946-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த சர்ச்சைக்குரிய ஒரு கொடூரமான சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது. சமீபத்தில் இந்த படம் சம்பந்தமாக ஒரு போஸ்டர் வெளியானது. அதை பார்த்த பலர் ரைமா சென்னை மிரட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து ரைமா சென் கூறும்போது, "கேலி, அவதூறு செய்வது சாதாரண விஷயம்தான். ஆனால் மர்ம நபர்கள் சிலர் விமர்சிப்பதோடு நிற்காமல் எல்லை மீறி விடுகின்றனர். மாகாளி படம் போஸ்டரை பார்த்த பலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.
மாகாளி படத்தில் எப்படி நடிக்கலாம். நீ கொல்கத்தாவில்தான் இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்று ஏதேதோ பேசுகிறார்கள். இந்த மிரட்டல்களை என்னால் தாங்க முடியவில்லை. படத்தை பார்த்த பிறகு கருத்தை சொல்லுங்கள். படம் பார்க்காமலேயே மிரட்டுவது சரியல்ல'' என்றார்.