< Back
சினிமா செய்திகள்
அரசியல் காரணங்களால் தேசிய விருதில் சார்பட்டா பரம்பரை  திரைப்படம் புறக்கணிப்பு - இயக்குநர் பா.ரஞ்சித்
சினிமா செய்திகள்

அரசியல் காரணங்களால் தேசிய விருதில் 'சார்பட்டா பரம்பரை ' திரைப்படம் புறக்கணிப்பு - இயக்குநர் பா.ரஞ்சித்

தினத்தந்தி
|
23 Aug 2024 9:14 AM GMT

தனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பு அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்தவர் பா.ரஞ்சித். தன்னுடைய வீட்டிலிருந்து கல்லூரி வரை செல்லும்அந்த பயணங்கள்தான் தனக்கு கதை எழுதுவதற்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக கூறியுள்ளார். இயக்குனர் லிங்குசாமியிடமும், வெங்கட் பிரபுவிடமும் உதவி இயக்குநராய் பயிற்சி பெற்றவர். 2012 ல் வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்க உள்ளார்.

தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது: 'சார்பட்டா பரம்பரை வெற்றிப் பெற்ற படமாக நாம் கொண்டாடும் அதே சமயத்தில் அதன் இரண்டாம் பாதி சரியில்லை என பலரும் விமர்சனம் செய்ததை பார்த்தோம். விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது. கிரிட்டிக்ஸ் விருதில் சார்பட்டா பரம்பரை பல விருது பெற்றன. அப்படி வாங்கினால் நிச்சயமாக தேசிய விருதும் தருவார்கள். ஆனால் நம்முடைய தேசிய விருது பட்டியலில் சார்பட்டா பரம்பரை உள்ளேயே போக முடியவில்லை.

இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா? தனது கருத்தின் அடிப்படையில் இதை நிராகரிக்கிறார்கள். வேண்டுமென்றே எனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்றார்.


மேலும் செய்திகள்