< Back
சினிமா செய்திகள்
நாடகக் காதல்னு சொன்னா ஏன் ஜாதி முத்திரை குத்துறீங்க - இயக்குநர் பேரரசு கொந்தளிப்பு
சினிமா செய்திகள்

நாடகக் காதல்னு சொன்னா ஏன் ஜாதி முத்திரை குத்துறீங்க - இயக்குநர் பேரரசு கொந்தளிப்பு

தினத்தந்தி
|
12 May 2024 10:06 AM GMT

பெண்ணை சீரழிப்பதும் நாடகக் காதலும் ஒண்ணுதான் என இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.

நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள படம் 'குழந்தை c/o கவுண்டம்பாளையம்'. ஸ்ரீ பாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சௌந்தர், ஷாஜி பழனிசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசும் கலந்து கொண்டார்.

பேரரசு பேசுகையில், "ரஞ்சித்தை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். எல்லோரும் நட்புக்காக வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நன்றியோடும் இருக்கிறார்கள். அந்த நன்றி இன்று சினிமாவில் இல்லை. எந்த ஒரு நடிகர் தன்னை இயக்கிய இயக்குநர்களை மதிக்கிறாரோ அவர்தான் நல்ல நடிகர். இல்லையென்றால் வெறும் சம்பாதிக்கும் நடிகர்.

இன்றைய சமூகத்தில் என்ன சீர்கேடுகள் நடக்கிறதோ அதைச் சீர்திருத்துவதற்காக படம் எடுத்தால் அவர்கள்தான் பொறுப்பான படைப்பாளி. எப்போதோ நடந்த கதையை இப்போது சொல்லி புதுசா ஒரு பிரச்சனையைக் கிளப்பினால் அவர் நல்ல படைப்பாளி கிடையாது. வரலாறை மக்களுக்கு சொல்வதுதான் பீரியட் பிலிம்.

இந்தக் கவுண்டம்பாளையம் படம் ஒரு சாதிக்குள் அடங்கிடக் கூடாது. இந்தத் தலைமுறைக்கான படம். நம்ம வீட்டு பொன்னுங்களை ஒருவன் சீரழித்தால் என்ன கோவம் வரும். அந்தக் கோவத்தைத்தான் இந்தப் படத்தில் ரஞ்சித் காட்டியிருக்கிறார். இந்தப் படம் மனுஷ ஜாதிக்கான படம். நாடகக் காதல் எனச் சொன்னால் ஏன் ஜாதி முத்திரை குத்துறீங்க. ஒரு பெண்ணை சீரழிப்பதும் நாடகக் காதலும் ஒண்ணுதான். எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும் சரி, அவன் ஒரு பொண்ணை ஏமாத்துனான்னா அவன் மனுஷ ஜாதியே இல்லை. அவன் ஒரு மிருகம். ஒரு அநியாயத்தை தட்டிக் கேட்க எந்த ஜாதியும் தேவையில்லை. நாடகக் காதல் செய்கிறவனை வெட்டி சாய்க்கலாம் எனச் சொல்பவர் சரியான டைரக்டர். அவர்தான் இந்தச் சமூகத்திற்கு தேவையான டைரக்டர்" எனக் கொந்தளித்து பேசினார்.

மேலும் செய்திகள்