< Back
சினிமா செய்திகள்
புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி
சினிமா செய்திகள்

'புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?' - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
1 Aug 2024 4:20 PM GMT

புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என நடிகர் விஷாலிடம் ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை,

விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' என்ற படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக கூறி விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக நடிகர் விஷால் இன்று கோர்ட்டில் ஆஜரானார். அப்போது லைகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, 'நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். மேலும், 'இது சினிமா ஷூட்டிங் அல்ல. கவனமாக பதிலளியுங்கள்' என விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, 'சண்டக்கோழி- 2 படம் வெளியாவதற்கு 10 நாட்கள் முன் திருப்பி தந்துவிடுவதாக கூறி பணம் வாங்குனீர்களா?' என்ற கேள்விக்கு 'பாஸ்' என விஷால் கூறிய போது குறுக்கிட்ட நீதிபதி, 'இது போன்று 'பாஸ்' எல்லாம் சொல்லக்கூடாது. ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.

இதையடுத்து, 'லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறார்களா?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஆம்' என பதிலளித்த விஷால், லைகா நிறுவனத்தால்தான் அந்த கடன் வாங்க நேர்ந்ததாக கூறினார். இன்றைய தினம் குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை நாளைய தினத்திற்கு(ஆகஸ்ட் 2) தள்ளிவைத்த நீதிபதி, நாளையும் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.



மேலும் செய்திகள்