< Back
சினிமா செய்திகள்
விஷால் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சினிமா செய்திகள்

விஷால் மீண்டும் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 Sep 2023 11:32 AM GMT

நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓ.டி.டி. தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தனர்.

கடந்த 8-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாக லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை செப்டம்பர் 15-ந்தேதி வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் செப்டம்பர் 12-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி நடிகர் விஷால் கடந்த முறை ஐகோர்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது விஷால் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அவர் மீறவில்லை என்றும், இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் விஷால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த 13-ந்தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்புக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்பதால், அந்த படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது நடிகர் விஷால் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் பிற்பகலில் நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர், விஷால் நேரில் ஆஜராக விலக்குஅளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்