
image courtesy:instagram@chetan_chanddrra
20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த பிரபல நடிகர்

நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது தாயாருடன் சென்றிருக்கிறார். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது 20 பேர் கொண்ட கும்பல் காரை மறித்து நடிகரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து நடிகர் சேத்தன் சந்திரா போலீசில் புகார் அளித்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் சேத்தன் சந்திரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது,
''ஒருவர் என்னிடம் கொள்ளையடிக்க முயன்றார். திடீரென்று 20 பேர் என்னை சூழ்ந்தனர். அவர்கள் என்னை அடித்து கடுமையாக தாக்கினார்கள். மூக்கிலும் குத்தினார்கள். காரையும் சேதப்படுத்தினர். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார். நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.