திருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி: பரபரப்பு பேட்டி

தரம் குறைவு என்று தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

Update: 2024-09-27 13:59 GMT

திருப்பதி:

ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுகளில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் அப்போதைய முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன்மூலம் சந்திரபாபு நாயுடு பாவம் செய்துவிட்டதாகவும்,

திருப்பதி கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் போலியான தகவலை பரப்புவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருந்தார். சந்திரபாபு நாயுடு செய்த பாவத்திற்கு பரிகாரமாக 28-ம் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

அத்துடன், 28-ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை நடத்தப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி இன்று திருப்பதிக்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென தனது பயணத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர். திருப்பதி கோவிலில் மாற்று மதத்தினர் செல்லும்போது இறை நம்பிக்கை தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆந்திரா அறநிலையத்துறை சட்டம் 136ன் கீழ், இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என திருமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தனது மதம் தெரியும் என்றும், முதல்-மந்திரியாக ஆவதற்கு முன்பே திருமலை கோவிலுக்கு பலமுறை சென்றுள்ளேன் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். வீட்டில் பைபிளை படித்தாலும், இஸ்லாம், இந்து மற்றும் சீக்கிய மதத்தை தான் மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

எனது கட்சியின் தலைவர்கள் கோவிலுக்கு செல்வதைத் தடுக்க திருப்பதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சிகள் காட்டுகின்றன.

சந்திரபாபு நாயுடு தனது 100 நாள் ஆட்சியின் தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை கொண்டு வந்தார். லட்டு விவகாரத்தில் தனது தோல்வியை மறைக்க, இறை நம்பிக்கை விவகாரத்தை கொண்டு வந்தார். வேண்டுமென்றே லட்டுவின் தரத்தில் சந்தேக விதைகளை விதைத்துள்ளார்.

என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள். நான் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்திருக்கிறேன்.

தரம் குறைவு என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்