இறந்தவரின் உடலை வழங்க கூடுதல் பணம் கேட்ட தனியார் மருத்துவமனை - ராமதாஸ் கண்டனம்


இறந்தவரின் உடலை வழங்க கூடுதல் பணம் கேட்ட தனியார் மருத்துவமனை - ராமதாஸ் கண்டனம்
x

கோப்புப்படம் 

கூடுதல் பணம் கேட்டு உயிரிழந்த நோயாளியின் உடலை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த திலகவதி நாராயணசாமி என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு புதுவை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் செலுத்தினால் தான் உடலை வழங்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

திலகவதியின் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே ரூபாய் 4.2 லட்சம் செலுத்தி விட்ட நிலையில் கூடுதல் பணம் கேட்டு உடலை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த நோயாளியின் உடலை பிணையாக வைத்துக்கொண்டு கூடுதல் கட்டணம் செலுத்தினால்தான் உறவினரிடம் ஒப்படைப்போம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும், மருத்துவ அறங்களுக்கும் எதிரானது.

உயிரிழந்த திலகவதியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story