காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை அதிகபட்சமாக திருவாரூரில் 51 மி.மீட்டர் பதிவானது


காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை அதிகபட்சமாக திருவாரூரில் 51 மி.மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 2 Oct 2018 10:45 PM GMT (Updated: 2 Oct 2018 7:52 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருவாரூரில் 51 மி.மீட்டர் பதிவானது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுகாலை முதல் தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்றி, மேகமூட்டமாக காணப்பட்டது. திடீரென பகல் 11.15 மணி அளவில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை 1 மணிநேரம் பெய்தது. இதனால் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்தது. திருவாரூரில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் மழை பதிவானது. தற்போது சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மழையால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நெல் நாற்றுகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆற்று தண்ணீர் இன்னும் சென்று சேராத கடைமடை பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்க வசதியாக இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டாலும் கல்லணைக்கால்வாயில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றுமாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

திருவாரூர்-51, வெட்டிக்காடு-31, திருவையாறு-30, பட்டுக்கோட்டை-30, கீழணை-22, திருவிடைமருதூர்-21, நெய்வாசல்தென்பாதி-17, வல்லம்-15, நீடாமங்கலம்-14, அய்யம்பேட்டை-12, தஞ்சை-11, மஞ்சலாறு-9, பாண்டவையாறு-9, மயிலாடுதுறை-9, திருத்துறைப்பூண்டி-7, பாபநாசம்-7, கோரையாறு தலைப்பு-7, மயிலாடுதுறை-6, கும்பகோணம்-6, குருங்குளம்-6, திருக்காட்டுப்பள்ளி-5, நாகை-5, மஞ்சலாறு-4, ஈச்சன்விடுதி-4, ஒரத்தநாடு-4, கல்லணை-3, மதுக்கூர்-3, பேராவூரணி-3.

Next Story