அரசு பள்ளியில் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

அரசு பள்ளியில் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சக்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்தார்.

அந்த சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 11 மாணவிகள், 10 மாணவர்கள் என 21 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தலைமை மருத்துவர் பால கோபால் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனைக்கு பதறியடித்துக்கொண்டு வந்தனர்.

மேலும் செஞ்சி போலீசார் மற்றும் உதவி கல்வி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பார்வையிட்டனர். அப்போது மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com